LEVITATION

—————————-

லெவிடேஷன்
—————————-

குடும்ப நலத் திட்டத்தில் கொஞ்சக் காலம் வேலை பார்த்த போதுதான்
கோபால் பிள்ளையைச் சந்தித்தேன்.

கோபால் பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில்
பிளாக் எக்ஸ்டன்ஷன் எஜுகேட்டராக இருந்தவர்.
ஒரு மாத காலப் பயிற்சிக்காக எங்கள் இடத்திற்கு வந்திருந்தார்.

அங்கிருந்த பயிற்சி விடுதி அறைகளில், அறைக்கு மூன்று பேர் எனும்
விதிப்படி கோபால் பிள்ளையுடன் இன்னும் இரண்டு பேர் இருக்க
முதல்நாளே விடுதி வார்டன் குல்க்ஹானந்தன் நாயரோடு
தகராறை ஆரம்பித்து விட்டார் கோபால் பிள்ளை,
அவருக்குத் தனி அறை வேணும் என . . .
குல்ஹானந்தன் நாயர் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்,

‘ அதெல்லாம் முடியாது. மூன்று பேராகத்தான் தங்க வேண்டும் !’

விடவில்லை கோபால் பிள்ளை. எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்.
வார்டன் கேட்ட பாட்டைக் காணோம்.

வேறு வழி ?
சிவனே என அந்த மற்ற இருவரோடும் தங்க ஆரம்பித்தார்.

அடுத்த நாள்தான் நடந்தது அது.
அந்த இரண்டு பேரும் பதறியவாறே அதிகாலை வார்டன் அறையின்
கதவைத்தட்டி எழுப்பினர்.

அரைத்தூக்கம் கலையாமல் திறந்தார் குல்ஹானந்தன் நாயர்.

‘ சார் சார், தயவுசெய்து எங்கள் அறை நண்பர் கோபால் பிள்ளைக்குத்
தனி அறை கொடுத்து விடுங்கள் . . .!’

‘ இந்த சிபாரிசு எல்லாம் வேண்டாம். , நேற்றுதானே சொன்னேன்
தனி அறை தர விதி முறை இல்லை என்று. 1
போங்கள்’
-என விரட்டாத குறையாக எரிந்து விழுந்தார்.

வந்தவர்கள் போவதாக இல்லை.

‘ சார் ஒன்று அவருக்குத் தனி அறை கொடுங்கள், இல்லையேல்
எங்களை வேறு அறைக்கு மாற்றி விடுங்கள் தயை கூர்ந்து . . .
வேறு வழி இல்லை எங்களுக்குப் பயமாக இருக்கிறது. .!

- என்று குய்யோ முய்யோ எனக் கதறவும்
நிதானமாக விசாரிக்க ஆரம்பித்தார் நாயர்.

என்னதான் நடந்தது ?

 அவர்கள் தொடர்ந்தது ஒரு நம்ப முடியாத
கதை போலவே இருந்தது.

‘சார், உண்மையில் நடந்தது இது. ஆனால் கனவில்லை.
அப்படிக் கனவு என்றாலும் எங்கள் இரண்டு பேருக்குமே
ஒரே நேரத்தில் ஒரே கனவு வர வாய்ப்பில்லை.
இராத்திரி விழித்துப் பார்த்தால் கோபால் பிள்ளை
கட்டிலில் இல்லை . . .!’

பயந்து கொஞ்சம் நிறுத்தினர் இரண்டு பேரும்.

‘ என்னாயிற்று. கோபால் பிள்ளை எங்காவது வேளியே போய் விட்டாரா?’

‘ இல்லை சார் கட்டிலுக்கு மேல் இருந்தார் ‘

‘ இதில் என்ன ஆச்சரியம் ? கட்டிலுக்கு மேல்தானே இருக்க முடியும்?’

‘ கட்டிலுக்கு மேலே என்றால், கட்டிலுக்கு மூன்றடி மேலே,
அத்தாயமாய் அந்தரத்தில் . . .!’
நண்பர்கள் கண்டது அப்பட்டமான நிசம்.

சித்தர்கள் இதை மிக எளிதாகச் செய்வார்கள்.
ஆங்கிலத்தில் இது லெவிடேஷன் என்பார்கள்.
லெவிடேஷன் என்றால் புவி ஈர்ப்பு விசைக்கு நேர் எதிர்.
கிராவிடேஷனுக்கு எதிராக பூமியின் கட்டுப்பாட்டு ஈர்ப்பைத் துண்டித்து
மேலே கிளம்புதல்.
அதி தீவிரமாகப் பிராணயாம்ப் பயிற்சி செய்பவர்களுக்கு இது சித்தி ஆகும்

அடுத்த நாளே நாங்கள் வேலை பார்த்த இடம் பூரா மிகவும்
பிரபலமாகி விட்டார் கோபால் பிள்ளை.

ஆளைப் பார்த்த மாத்திரம் சும்மா அப்படியே புட்டு புட்டு வைத்துவிடுவார்.
புரியாத மக்கள் அவரை சோதிடர் என அழைத்தனர்.
முக்காலமும் சொல்லும் ஞானி.

நான் அவரை முதலில் சந்தித்த போது என்னிடம் கேட்டார்.

‘ சொல் உனக்கு என்ன தெரிய வேணும் ? ‘

‘ இப்படி நீங்கள் அடுத்தவர் மனம் ஊடுருவி சொல்வது,
நாளை நடக்கப் போவதைச் சொல்வது – இதை எல்லாம் எப்படிச் சொல்கிறீர்கள் ?’

என் கேள்வி அவருக்கு வித்தியாசமாகப் பட்டிருக்க வேண்டும்.
அப்புறம் நடந்தது இந்தக் கட்டுரைக்கு அப்பாற் பட்ட விஷயம்.
 
நான் சொல்ல வந்தது எல்லாம் இந்த லெவிடேஷன் பற்றி. . .

விஞ்ஞான காலத்தில் இது எல்லாம் சாத்தியமா எனக் கேட்பது அறிவீனம்.
விஞ்ஞானம் அதை எல்லாம் ஆராயும் அளவுக்கு இன்னம் வளரவில்லை.
அவுவளவுதான்!
அதற்காக அது பொய் என்று ஆகிவிடாது.

நான் ஒன்றும் கோபால் பிள்ளையை அந்தரத்தில் அப்படியே ஆசனமிட்டு
அமர்ந்து பார்த்திருக்கவில்லைதான்.
ஆனால் பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

பள்ளி பயின்ற காலத்தில் ஒரு ஹட யோகி எங்கள் பள்ளிக்கூடம்
வந்திருந்து சில சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்.
கடப்பாரைக் கையால் வளைப்பது,
மல்லாத்திப் படுத்துக் கொண்டு கல்உரலை மார் மேல் தாங்கி
இரண்டு பேரை உலக்கை கொண்டு மாறி மாறி நெல் குத்தச் சொன்னது
அப்புறம் நான் சொன்ன லெவிடேஷன் வித்தை . . .

ஒரே ஒரு மூங்கில் கம்பு மட்டும் தரையில் ஊன்றி
கையால் அதைப் பிடித்து, உடம்பைப் பூரா
படுக்கை வசத்தில் கால் நீட்டி தரையை விட்டு அவர் என்னதான்
ஆறடி எழுப்பிப் கிடந்த கோலத்தில் மூச்சடக்கி இருந்தாலும்,
அந்த ஒற்றைக் கம்பு ஆதாரம்
அது உதைத்தது ஆகவே
அதை ஒரு முழுமையான லெவிடேஷனாக என்னால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது மட்டுமே நான் கண் கூடாகப் பார்த்த ஒரு ஏறத்தாழ லெவிடேஷன்.

மற்றபடி பரமஹம்ஸ யோகானந்தர் தன்னுடைய சுயசரிதையில்
பூமியை விட்டு உயரே எழும்பும் பகதூரி மகாசாயரைப் பற்றிக்
கூறி இருக்கிறார். . .

“How does he remain in the air, defying the law of gravitation?”

“A yogi’s body loses its grossness after use of certain pranayamas.
 Then it will levitate or hop about like a leaping frog. Even saints who do not practice a formal yoga have been known to levitate during a state of intense devotion to God.”

இன்னொருத்தர் பற்றியும் உங்களுக்குச்சொல்ல வேண்டும்.
அவர்தான் லோப்சங் ராம்பா, ஒரு திபெத்தியன் யோகி.
தனது புத்தகங்களில்
இந்த லெவிடேஷன் பற்றி ஏராளமாகச் சொல்லி இருக்கிறார்

குமரிக் கண்டகாலத்தில் இருந்த மக்கள் இந்த புவி ஈர்ப்பு எதிர் சக்தி பற்றி
அறிந்திருந்தனராம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்க்ள. நமக்கு இது கைவரப் பெற்றால்
என்னவெல்லாம் நடக்கும் என. . .

இரயில்வே நிலையங்களில் எல்லாப் போர்ட்டர்களும்
வேலைஇல்லாமல் போய் விடுவார்கள்.
பயணிகள் எல்லாம் லெவிடேஷன் சக்தியால் எவ்வளவு
லக்கேஜ்களையும் எளிதாக நகர்த்திச் செல்வார்கள்.
பள்ளிப் பிள்ளைகளுக்குப் புத்தகச்சுமை கவலையே இல்லை.

வீர விளையாட்டுகளில் ஹை ஜம்ப் என்பது பெரிய
சர்ச்சைக் குரிய விஷயமாக மாறி இருக்கும்.

விண்வெளிப் பயணம் மிக எளிதாக இருக்கும்.
அடுத்த கேலக்ஸியில் பெண்பார்த்து நிச்சயதார்த்தம் நடக்கும்.
நிறையப் பேருக்கு லெவிடேஷன் பிரச்சனை ஏற்பட்டு
அஜீரணக் கோளாறெல்லாம் வரும்
ஏப்பம், கொட்டாவி எல்லாம் எளிதாக வரும்
பால் பேனா, பேனா எல்லாம் இராது. இருந்தாலும் எழுதாது
இப்படி எத்தனையோ. . .

அதெல்லாம் கிடக்கட்டும்.
இப்போது பரமஹம்ச யோகாந்தர் சொன்ன விஷயத்துக்கு வருகிறேன்.

இந்த லெவிடேஷன் சக்தி வெறும் பயிற்சியால் வருவது நிசம்.
ஆயினும் அதற்கும் இறைச் சக்திக்கும் சம்பந்தமே இல்லை.

இந்த மாதிரி சில கிம்மிக்ஸ் வேலைகளை எல்லாம் செய்து
சிலர் மக்களை அசர வைத்துவிடுகிறார்கள்.
நம் மந்தையாட்டு மக்களும் ஆ… ஊ… என்று அவர்கள் சாமியாக்கி
விடுகிறார்கள்.

இறைச் சக்தியால் இது நிகழ்ந்தது என்றால் அவன் அதை
வெளிக்காட்டவே மாட்டான்.
சும்மா வெறும் அரைகுறைகள், மூவாசைகளையும் வென்றதாகப்
பேர்பண்ணிக் கொள்கிறவர்கள், சும்மா நாலாவது ஆசையான
புகழ்ச்சிக்கும், கீர்த்திக்கும் ஆலாய்ப் பறக்கிறவர்கள்
இவர்கள் இப்படித் தம்பட்டம் அடிப்பது வழக்கம்.

1970 வாக்கில் இப்படித்தான் தண்ணீரின் மேல் நடக்கிறேன் எனப்
பத்திரிக்கையாளர்களை எல்லாம் கூட்டி நீச்சல் குளத்தைச் சுற்றி ஒரே கூட்டம்.

அந்த மகரிஷி தன் திருவடியை தண்ணீர் மேல் வைத்தவுடன்
சர்என தண்ணீர்க்குள் போனதுதான் மிச்சம்.
வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குச் சிரிப்பும், கேலியும் மட்டுமே மிச்சம்.

இதுதான் இறை அருள் வல்லபத்திற்கும்,
மனிதன் செய்யும் யோக வித்தைகளுக்கும்
உள்ள வித்தியாசம்.

திருநாவுக்கரசர் ரெம்பக் கஷ்டப் பட்டு நடந்து
கயிலை சென்றார்.
1964க்குப் பிறகு கயிலை சீனாக்காரன் வசம் போய் விட்டது.
பாஸ்போர்ட் இல்லாமல் இப்போது போக முடியாதாம்.
நாவுக்கரசர் காலத்தில் பாஸ்போர்ட்டாவது , ஒண்ணாவது !
ஞானிகளுக்கு ஏது நாட்டுக் கட்டுப்பாடு என்றாலும்
வெகு சிரம்ப் பட்டுத்தான் கயிலை ஏறினார்.

இப்போதே இவ்வளவு சிரம்ம் என்றால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்
அவர் எவ்வளவு சிரம்ப் பட்டிருக்கவேண்டும் பாருங்கள் !
அப்போதோ திருநாவுக்கரசருக்குத் தள்ளாத வயது வேறு .. .

எப்படியோ எத்தனையோ இடையூறுகளுக்கிடையில் போனாலும்
அவரால் திரும்பி வர முடியவில்லை.

நடராசப் பெம்மானை மனத்துள் உன்னி
மானச சரோவரில் இறங்கி மூழ்கினார்.
மூழ்கி எழுந்து விழித்தால்
சுற்றிப் பனிமலைகளைக் காணோம்.
மூழ்கிய இடம் மானசரோவர் ஏரி.
எழும்பிய இடமோ திருவையாறு . . .

இதுதான் இறைவன் பண்ணி அருளிய ஒரு அப்ரப்ட் லெவிடேஷன் . . .

‘ போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர்பின் புகுந்தேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது . . .’
- என்ற நாவுக்கரசர் தேவாரத்திற்கு நம் மக்கள்
தவறாகவே பொருள் கூறுகிறார்கள்
நாவுக்கரசர் திருவையாற்றிறகு கால் சுவடு தரையில் படாமல்
அதாவது தலையால் நடந்து வந்தார் என்கிறார்கள்.

பேத்தல். !
யோகாசனங்கள் பற்றி எந்த இடத்திலும் பேசாத நாவுக்கரசர்
சிரசாசனம் செய்ய வாய்ப்பே இல்லை.
செய்திருந்தாலும் சர்க்கஸகாரன் மாதிரி தலைகீழாய்க் கையால் நடந்து வந்தார்
என்பது அபத்தம்.

வயதான ஒரு ஞானியை இப்படி பெருமை சேர்க்கிறேன் பேர்வழி என்று
இப்படிச் சிரம்ப் படுத்தி நடக்க வைப்பதாய்க் கற்பனை செய்வது
சரியாகப் படவில்லை எனக்கு.

மானச சரோவரில் ஆழ்ந்தவர் இறைவனின் திருவருள் வல்லபத்தால்
கால் சுவடு படாமல் லெவிடேஷன் மற்றும் டெலிபோர்ட் முறையில்
ஐயாறு வந்தார் எனப் பொருள் கொள்ளலே சிறப்பு !

கயிலை என்றதும் அவ்வையார் கதையும் நினைவுக்கு வருகிறது.

சேரமான் பெருமாளும், அவ்வையாரும் கயிலைக்குப் புறப் பட்டனர்.

இராஜாவுக்கு என்ன, யானையும், குதிரையும் கூடவரும்.
சேரமான் வேகமாக முந்திச் சென்றான்.

கூழுக்குப் பாடிய அவ்வை பாவம் என்ன செய்தாள்
விநாயகனை வேண்டப் பிள்ளையாரப்பன் அவ்வையைச்
தும்பிக்கையால் ஒரே செந்தூக்காகத் தூக்கி
சேரமான் வந்து சேர்வதற்கு முன்
கயிலையில் வைத்ததாகச் சொல்கிறார்களே
அதுவும் ஒரு வகை லெவிடேஷன்தான் . . .!

குதிரையும் காதம் யானையும் காதம்
குல மன்னனே !
– என்ற பாடல் உங்களுக்குத் தெரியும்தானே ?

நம் வள்ளலார் இராமலிங்க அடிகளுக்குக் கூட இப்படி ஒரு
லெவிடேஷன் அனுபவம் வாய்த்திருக்கிறது என்றால் நம் சன்மார்க்கிகள்
எங்கே என்கிறார்கள்.

எழுத வேண்டிய விஷயங்கள் எல்லாம்
வள்ளலார் வாழ்க்கை வரலாற்றில் இல்லை
மாறாக்க் கண்ணாடியில் கடவுளைக் கண்டது,
வேண்டாம் எனும் அவ்வை பாடலுக்கு மாறாக
வேண்டும் வேண்டும் என எழுதியது
அது இது என முரணான விஷயங்களையே கயிறு திரிக்கிறார்கள்.

எதை எதை எழுத வேண்டுமோ அதைச் சொல்வதே இல்லை.
அப்படி வள்ளலார் வரலாற்றை எழுதியவர்களால்
விடு பட்டதுதான் இந்த லெவிடேஷன் விஷயம்.

வரலாறு எழுதுபவர்களுக்கு என்ன,
ஒரு பாம்பு வரவேண்டும் கடிக்க வேண்டும் ஒரு பாடல் பாட வேண்டும்
பாடியதும் விஷம் இறங்க வேண்டும்
என்றால் சுவாரசியமாக வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவார்கள்.

மண்ணைப் பொன் ஆக்கினார் என்றால்
சுவாரசியமாக விளக்குவார்கள்.

நாலு பேர் பார்க்க வேண்டும்
பார்த்த சாட்சி வேண்டும் அதை எழுதினால்தான் வரலாறு
அகச் சான்று அனுபவம் எல்லாம் வெறும் கற்பனை மாயம்
என ஒதுக்கப் படும் போது என்னதான் செய்ய முடியும் ?
அப்படி இந்த அகச் சான்று மட்டுமே இருக்க
வரலாற்றில் வராமல் அவர் பாடல்களில பம்மிக் கிடக்கிற
சில விஷயங்களை வெளிக் கொணர வேணும் என்பதற்காகவே
இதை எழுதுகிறேன் . . .

வள்ளல்பிரான் ஒருதரையில் உடுத்த துகிலை
அவிழ்த்துப் படுக்க வேண்டிய கட்டாயம்..
கலக்கத்தோடு அயர்ந்து படுத்த போது
இறைவன் அருகே வந்து, பயப்படாதே எனச் சொல்லி
ஒரே தூக்காகத் தூக்கி வேறு இடத்தில் கொண்டுபோய் வைத்தானாம்

(ஆறாம் திருமுறைப் பாடல் 4752)

தானாகப் பயிற்சியினால் மக்கள்முன்
இதை ஒருவன் செய்திருந்தால்
ஆகா, இங்கே படுத்தவன் அங்கே எழும்பி எப்படி மேற் சென்றான் என
உலகு வியந்திருக்கும். !
ஆனால் இது அருள் வல்லபத்தால் நிகழ்ந்தது.
நடராசருக்கும் வள்ளலாருக்கும் மட்டுமே தெரிந்தது.
உங்களுக்கும் தெரிய வேண்டும் என இதைச் சொன்னேன்.

ஆறாம் திருமுறையிலே திருஅருட்பேறு என்ற தலைப்பில்
இது பற்றி வள்ளலார் 10 வெண்பாக்கள் பாடி இருக்கிறார். . .(பாடல் எண் 4787 முதல் 4776 வரை)

உதாரணமாக ஒன்று.

அஞ்சிஅஞ்சி ஊனும் அருந்தாமல் ஆங்கொருசார்
பஞ்சின் உழந்தே படுத்திருந்தேன் – விஞ்சி அங்கு
வந்தாய் எனத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
தந்தாய்என் நான்செய்த தவம்.

வாழ்க்கையிலே ஒரு லிப்ட் இருக்கவேணும் என
ஆலாய் அடித்துக் கொளகிறார்களே இதுதான் உண்மையான லிப்ட் . . .

இதைத்தான் வள்ளலார்,

வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள் ‘ – எனப் பாடுகிறார்.

-ஸ்ரேயமுடன் . . .
படம்

magudadheeban@gmail.com

Leave a Comment